தங்களது லாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக முதலீட்டாளர்களுக்குப் போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபட்ட 28 நிறுவனங்களை செபி தடை செய்துள்ளது.
நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்படித் தங்களுக்குத் தேவையற்ற குறுஞ்செய்திகள் வந்துகொண்டிருப்பதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபிக்கு முதலீட்டாளர்கள் பலர் தொடர்ந்து புகார் வழங்கிய வண்ணம் இருந்தனர். இந்த விசயத்தில் நடவடிக்கையில் ஈடுபட்ட செபி கல்பா கமர்சியல்ஸ் என்ற நிறுவனத்திடமும் அதன் கிளை நிறுவனங்களிடமும் ஆய்வு மேற்கொண்டது. 2017 அக்டோபர் 10 முதல் 18 வரையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அந்நிறுவனம் போலியான குறுஞ்செய்திகளை முதலீட்டாளர்களுக்கு அனுப்பியுள்ளது கண்டறியப்பட்டது. மேலும், கல்பா கமர்சியல்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட 28 நிறுவனங்கள் 3.42 கோடி போலியான குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்கிப் பங்குகளை வாங்க வைக்க முயற்சித்த இந்நிறுவனங்களை செபி தடை செய்துள்ளது. இதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கான ஒரு நெட்வொர்க் அமைப்பே செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் செபி அமைப்பின் உறுப்பினரான மதபி புரி தெரிவித்துள்ளார்.
