புதுடில்லி: இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு நிகழ உள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப் பாதையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது வந்து விழும். இதன் காரணமாக தான் சந்திரக் கிரகணம் தோன்றுகிறது. பெரும்பாலான நேரங்களில் சந்திரன் சரியான நேர் கோட்டில் வராததால் முழுமையான சந்திரகிரகணம் நிகழாது. ஆனால் இந்த முறை சந்திரன், பூமி, மற்றும் சூரியன் எல்லாம் ஒரே கோட்டில் சந்திக்க இருப்பதால், முழு சந்திரகிரகணம் நிகழ உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று (ஜூலை 27) இரவு 11.54 மணிக்கு தொடங்கும் சந்திரகிரகணம், நாளை அதிகாலை 1 மணிக்கு முழு சந்திரகிரகணமாக மாறி, 2.43 மணி வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த முறை தோன்றிய கிரகணத்தை விட தற்போது தெரிய உள்ள சந்திரகிரகணம் பெரிய அளவிலானது என்றும், முழு சந்திரகிரகணம் ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் தோன்றும் எனவும் கூறப்படுகிறது. இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும், அவ்வாறு பார்ப்பதால், பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திரகிரகணம் ஐரோப்பிய, ஆப்பிரிக்கா, ஆசியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும் என்று கூறும் வானிலை ஆய்வாளர்கள், இதுபோன்ற முழு சந்திரகிரகணம் அடுத்து வரும் 2029-ம் ஆண்டு, ஜூலை 25ஆம் தேதி தான் நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும்இந்த சந்திரகிரகணம் தெரிய இருப்பதால் புகைப்படக்கார்கள் தங்களுடைய கேமராவில் சந்திரகிரகணத்தை படம்பிடிக்க தயாராக உள்ளனர்.இவர்கள்மட்டுமல்லாது பொதுமக்களும் தங்களுடைய ஸ்மார்ட் மொபைல் போனில் சந்திரனை படம் பிடிக்க தயாராகி வருகின்றனர்.
