சிறுமிக்குச் சூடு: 14 குழந்தைகள்?
மனநலக் காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்குச் சூடு வைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகேயுள்ள ஆலங்கோடு பகுதியில் சிஎஸ்ஐ நிர்வாகத்துக்குச் சொந்தமான மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் திருநெல்வேலி, நாகர்கோவில், தேவாளை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 26 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் தங்கிவருகின்றனர். இந்தக் காப்பகத்தில் தங்கியுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த தங்க இசக்கி என்ற மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு உடல் முழுவதும் தீக்காயம் வைத்து சித்ரவதை செய்ததாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்டக் குழந்தைகள் நல அதிகாரி குமுதா தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இன்று (ஜுலை 22) விசாரணை நடத்தினர். இதுகுறித்து குமுதா செய்தியாளர்களிடம் பேசுகையில், “காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு நடத்திய விசாரணையில் 26 குழந்தைகளில் 14 குழந்தைகள் மாயமான அதிர்ச்சித் தகவலும் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், சமையலர் சரோஜாவை கைது செய்தனர். இதுதொடர்பாக காப்பக நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
