செப்டம்பர் முதல் மே வரையிலான ஒன்பது மாதங்களில் இந்தியாவில் சுமார் 44 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொழிலாளர் சேமநல வைப்பு நிதி அலுவலகத்திடமிருந்து கிடைத்த புள்ளி விவரங்களைக் கொண்டு வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த விவரங்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், 2017 செப்டம்பர் முதல் 2018 மே மாதம் வரையில் 44 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மே மாதத்தில் மட்டும் மொத்தம் 7.43 லட்சம் புதிய சம்பளப் பட்டியல்கள் (Payrolls) உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 18 முதல் 21 வயதுக்குட்பட்ட பிரிவில் 2.5 லட்சம் புதிய சம்பளப் பட்டியல்களும், 22 முதல் 25 வயதுக்குட்பட்ட பிரிவில் 1.9 லட்சம் சம்பளப் பட்டியல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த விவரங்கள் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிடும் நான்காவது அறிக்கையாகும். முன்னதாக சென்ற ஏப்ரல் மாதத்தில் அமைப்பு சார்ந்த துறைகளில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டன. தொழிலாளர் சேமநல நிதி, தொழிலாளர் மாநில காப்பீட்டுத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான அடுத்த அரசு அறிக்கை ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.
