வேலை மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக இந்தியர்களின் மன அழுத்தம் மிக அதிகமாக இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சுகாதாரக் காப்பீட்டு நிறுவனமான சிக்னா இதுகுறித்து வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில், 'வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் மன அழுத்தம் மிக அதிகமாக உள்ளது. ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 89 விழுக்காட்டினர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகக் கூறியுள்ளனர். இது சர்வதேச சராசரியை விட அதிகமாகும். சர்வதேச சராசரியே 86 விழுக்காடாகத்தான் உள்ளது. மன அழுத்தத்திற்கு முக்கியக் காரணமாக இருப்பது வேலையும், அவர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகளும்தான்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது தொடர்ந்து நான்காவது ஆண்டாக சிக்னா நிறுவனத்தால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆய்வு ஆன்லைன் வழியாக பிப்ரவரி முதல் மார்ச் வரையில் நடத்தப்பட்டது. 23 நாடுகளைச் சேர்ந்த சுமார் 14,467 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 20 நகரங்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளன. இதில் பங்கெடுத்தவர்களில் 1000 பேர் வரை 25 வயதைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
18 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களே மற்ற வயதினரைக் காட்டிலும் வேலை மற்றும் நிதி பிரச்சினைகளால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இவர்களில் 95 விழுக்காட்டினர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகக் கூறியுள்ளனர். இந்தியாவில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் தங்களது நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்கவும் இயலவில்லை என்று கூறியுள்ளனர். அதேபோல குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவதும் குறைந்து வருவதாக இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிறுவனம் ஆய்வு நடத்திய நான்கு வருடங்களிலும் இந்தியா மோசமான இடத்தையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.