13,000 சதுர அடி பரப்பளவில் தேசியக் கொடி!
நாகை மாவட்டம் சீர்காழி அருகே 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தேசியக் கொடியை பள்ளி மாணவர்கள் வரைந்துள்ளனர்.
72ஆவது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை இன்று அனைவரையும் நினைவுகூருவோம். அதனடிப்படையில், நாகையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், தேசியக்கொடியை வரைந்து பலரின் பாராட்டுகளைப் பெற்றுவருகின்றனர்.
சீர்காழியை அடுத்த வைதீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ளது ஸ்ரீ முத்துராஜம் என்ற தனியார் பள்ளி. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சாதனை முயற்சியாக 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தேசிய கோடியை இன்று (ஆகஸ்ட் 15) வரைந்தனர்.
130 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் வண்ணபொடிகள் மூலம் தேசியக் கொடியை வரைந்து அசத்தியுள்ளனர். சாதனை முயற்சியாக வரையப்பட்ட தேசியக்கொடியை பள்ளி மாணவர்களின் பெற்றோரும், பொதுமக்களும் பார்வையிட்டு, அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
