2019ல் கூட உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை’ தேர்தல் ஆணைய செயல்பாட்டில் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி !!

மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அரசின் செயல்பாடுகளை பார்த்தால் 2019ம் ஆண்டில் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என்பதுபோல் தெரிகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

 உள்ளாட்சி தேர்தலை 2017 நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 18ம் தேதிக்குள் அறிவிப்பாணை
வெளியிட மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், வார்டு வரையறையை காரணம் காட்டி மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகரன் ஆகியோருக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார்.
அவர் வாதிடும்போது, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வார்டு மறுவரையறை பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதை அரசுக்கு பரிந்துரைப்போம். அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும். வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது. 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தலை நடத்த அனுமதி அளிக்கும் சட்டப்பிரிவை அரசு ரத்து செய்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளன என்று வாதிட்டார்.

 இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடும்போது, தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் எந்த வார்டும் முறையாக இல்லை. வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளது. வார்டு மறுவரையறை முடித்தால் அதற்கு ஒப்புதல் அளித்து, இடஒதுக்கீட்டின்படி பிரிக்க அரசுக்கு அவகாசம் தேவைப்படும் என்றார்.

 அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், ஆணையம் அறிக்கை அளித்த பின் எவ்வளவு நாட்களில் ஒப்புதல் அளிக்கப்படும் என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு ஆரியமா சுந்தரம், வார்டு வரையறை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்த பின்னர்தான் ஒப்புதலுக்கான காலக்கெடுவை அரசால் நிர்ணயிக்க முடியும் என்று பதிலளித்தார்.

 இதைக்கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே போதுமான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2016ல் நடத்த வேண்டிய தேர்தல் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் நடத்தப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் இதே நிலை நீடித்தால் 2019ம் ஆண்டிற்குள் கூட தேர்தலை நடத்தி முடிக்க மாட்டீர்கள் என்பதுபோல் தெரிகிறது என்று அதிருப்தி தெரிவித்தனர்.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, திமுக தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிட உள்ளார்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...