730 நாட்கள் விடுப்பு கேட்ட அதிகாரி!
பாகிஸ்தான் நாட்டில் ரயில்வே அதிகாரி ஒருவர் 730 நாட்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வேண்டுமென்று கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையில் புதிய ஆட்சி நடைபெற்று வருகிறது. ரயில்வே அமைச்சராக ஷேக் ரஷீத் அகமது பதவி வகித்து வருகிறார். ரயில்வே துறையில் தலைமை வர்த்தக மேலாளராகப் பணியாற்றும் முகமது அனீப் குல், திடீரென 730 நாட்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், புதிய ரயில்வே அமைச்சரின் நடவடிக்கை, வேலை தெரியாதவர் போலுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். “அவரின் அணுகுமுறை மிக மோசமாக இருக்கிறது. பாகிஸ்தான் சிவில் சர்வீஸில், ஓர் அரசு ஊழியராக அவருடன் பணியாற்ற முடியாது. அதனால், எனக்கு 730 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்” என்று தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சிலர் இதனை நம்ப முடியாது என்று தெரிவித்துள்ளனர்; இரண்டு ஆண்டுகளுக்கு விடுப்புடன் கூடிய சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் சிலர் கூறியுள்ளனர்.
