கேரளாவில் பெயிது வரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் முல்லைப்பெரியாறு அணைக்கு வந்து கொண்டிருந்தது.
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்க முடியும் என்பதால், எந்த சமயத்திலும் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால், தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த அணை பாதுகாப்பு அதிகாரிகள் அணைக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் விரைந்து சென்று அணையைத் திறந்தனர்.
இதனால், அணையின் 13 மதகுகள் வழியாக வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள மானிலத்தின் இடுக்கி மற்றும் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. அணையின் முழு கொள்ளவாக 142 அடி உள்ளது. இன்னும் ஒரு இரு தினங்களில் முழு கொள்ளளவையும் எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 139 அடியாக குறையுங்கள் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவசர அவசரமாக கோரிக்கை வைத்துள்ளார்.
