நாகர்கோவில் மாநகராட்சி ஆகிறது... முதல்வர் அறிவிப்பு!!!


கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில், விரைவில், மாநகராட்சி ஆகிறது. இதற்கான அறிவிப்பை, அங்கு நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். இதை அமல்படுத்துவதற்கான அரசாணையும், விரைவில் வெளியாக உள்ளதால், அம்மாவட்ட மக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


நாகர்கோவிலில், தமிழக அரசு சார்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. சபாநாயகர் தனபால், தலைமை வகித்தார். துணை முதல்வர்பன்னீர்செல்வம், முன்னிலை வகித்தார்.விழாவில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்காக, 26 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விபரம்:


* கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும், 75 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அவர்களில், 22 லட்சம் பேர் மட்டுமே, விவேகானந்தர் பாறையில் உள்ள, நினைவு மண்டபத்திற்கு, படகில் செல்ல வாய்ப்புள்ளது. மற்றவர்களும் செல்வதற்காக, 6 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரண்டு படகுகள் வாங்கப்படும்


* ஒரே சமயத்தில், மூன்று படகுகள், விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காக, கூடுதலாக, இரண்டு படகு அணையும் தளங்கள், 20 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்படும்


* விவேகானந்தர் பாறைக்கு செல்ல, 'ரோப் கார்' வசதி யும், விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பாறையிலிருந்து, திருவள்ளுவர் சிலை பாறைக்கு செல்ல, கடல் வழி பாலமும், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், 120 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்


* விளவங்கோடு தாலுகாவை பிரித்து, கிள்ளி யூரில் புதிய தாலுகா உருவாக்கப்படும். கல்குளம் தாலுகாவை பிரித்து, செருப்பலுாரை தலைமையிடமாக கொண்டு, புதிய திருவட்டாறு தாலுகா அமைக்கப்படும்


* தக்கலையில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும்


* எல்லைகள் மறு சீரமைப்பு குழுவின், பணி நிறைவடைந்ததும், நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்


* அழகியபாண்டிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், 40 லட்சம் ரூபாய் செலவில், கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படும்


* அகஸ்தீஸ்வரம் தாலுகா விற்கு உட்பட்ட, தாமரைக்குளம் கிராமத்தில், பழையாற்றின் குறுக்கே, 5.23 கோடி ரூபாய் செலவில், தடுப்பணை கட்டப்படும்


* கோவளம், அழிக்கல், மேல்மிடாலம், இணையம் கிராமங்களிலும், பெரியநாயகி தெருவிலும், அடுத்த நிதியாண்டில், துாண்டில் வளைவு அமைக்கப்படும்


* மார்த்தாண்டம் துறை கிராமத்தில், 80 லட்சம் ரூபாய் செலவில், கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும்


* கன்னியாகுமரி, அரசு மருத்துவக் கல்லுாரியில், தற்போதுள்ள, 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 150 ஆக உயர்த்தப்படும்


* கன்னியாகுமரி மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு, 8.82 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன உபகரணங்கள்; அதிநவீன டயாலிசிஸ் கருவிகள் நிறுவப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார். இதில், கன்னியாகுமரி மாவட்ட மக்களின், நீண்ட நாள் கனவான, நாகர்கோவில் நகராட்சியை, மாநாக ராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பு, அங்குள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


உள்ளாட்சி தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும், வார்டுகளை வரையறை செய்யும் பணி, தற்போது நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், நாகர்கோவில் நகராட்சியை, மாநகராட்சி யாக தரம் உயர்த்து வதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது.ஏற்கனவே, தமிழகத்தில், 12 மாநகராட்சிகள் உள்ளன. 13வது மாநகராட்சியாக, நாகர்கோவில் உருவாக உள்ளது.

98 ஆண்டுக்கு பின்...


நாகர்கோவில் நகராட்சி, 1920-ல் உருவாக்கப்பட்டது. 1978-ல்,தேர்வு நிலை,1988-ல், சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்தப் பட்டது. தற்போது, 52 வார்டுகள் உள்ளன.2011-ல், ஆசாரிப்பள்ளம் பேரூராட்சி மற்றும் நான்கு ஊராட்சிகள், நாகர்கோவில் நகராட்சி யுடன் இணைக்கப் பட்டன.மொத்த மக்கள் தொகை, 2.60 லட்சம்; பரப்பளவு, 49.10 சதுர கி.மீ., - நமது நிருபர் -

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...