மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல கல்லூரியான பர்கத்துல்லா கல்லூரியில் ‘மருமகள்’ என்னும் புதிய பயிற்சி வகுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
புதிதாகத் திருமணமாகி புது வீட்டுக்குச் செல்லும் பெண்கள், அங்குள்ள புதிய குடும்பச் சூழ்நிலைக்கேற்ப எவ்வாறு பழக வேண்டும், அங்குள்ளவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ள ஏதுவாகச் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என மத்தியப் பிரதேசத்திலுள்ள பர்கத்துல்லா கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பானது மூன்று மாதங்கள் செயல்படும் எனவும், இந்த வகுப்புகள் வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் எனவும், அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.சி.குப்தா தெரிவித்துள்ளார். புகுந்த வீட்டில் பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத்தர இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்பு கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறியுள்ளார். கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள், தங்கள் பாடப்பிரிவுகளுடன் சேர்த்து இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் பயிலலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயிற்சி வகுப்பில் சேரும் மாணவிகள், இந்தச் சமுதாயத்தில் தங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர்ந்துகொள்வர் என்று கூறியுள்ளார். இந்தப் பயிற்சி குறித்து மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அவை பின்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் குப்தா தெரிவித்துள்ளார்.
