அரியானா மாநிலம், குர்கானில் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் கிருஷண் கந்த். இவரது மனைவி ரித்து மற்றும் 17 வயது மகன் துருவ் ஆகியோர் பாதுகாவலர் மகிபால் (32)உடன் காரில் நேற்று(அக்.13) மதியம் 3 மணியளவில் மார்க்கெட்டிற்கு சென்றனர். 3.30 மணியளவில் வேலைகளை முடித்து விட்டு திரும்பிய ரித்து மற்றும் துருவ், வீட்டிற்கு செல்வதற்காக காரின் அருகே சென்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய பாதுகாவலர் மகிபால், ரித்துவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சிறிது நேரத்தில் தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியால் ரித்துவை மார்பிலும், வயிற்றிலும் சரமாரியாக சுட்டார். அதை தடுக்க முயன்ற துருவையும் தோள்பட்டை, தலை என 3 முறை சுட்டார். இதில் துருவ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மயங்கிய நிலையில் கிடந்த ரித்துவை, மகிபால் காலால் பலமுறை மிதித்து தாக்கிவிட்டு, காருடன் தப்பிச் சென்றார்.
சம்பவ நடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு நீதிபதி கிருஷணுக்கு போன் செய்த மகிபால், 'உனது மனைவி மற்றும் மகனை கொன்று விட்டேன்' என, கூறி உள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் வீடியோ எடுத்துள்ளனர். அருகில் இருந்த சிலர் ரித்து மற்றும் துருவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ரித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் துருவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ நடந்த 2 மணி நேரத்திற்கு பிறகு மகிபால் கைது செய்யப்படடார். அவரிடம் நடந்த விசாரணையில், என்னால் இதை நம்பமுடியவில்லை என்று மட்டும் மகிபால் திரும்ப, திரும்ப கூறி வருவதாகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மகிபால், நீதிபதியிடம் தனி பாதுகாலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கொடூர கொலை சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
