'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளி, விடுதிகளில்
பணியாற்றும், ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு மாதந்தோறும், குறைதீர்
முகாம் நடத்த வேண்டும்' என, ஆதிதிராவிட நலத் துறை உத்தரவிட்டுள்ளது.
நலத் துறையின் கீழ், 1,065, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்; 301 உண்டி
உறைவிடப் பள்ளிகள் செயல்படுகின்றன. அதே போல், 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள்; 301 அரசு பழங்குடியினர், உண்டு உறைவிட பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வி துறை கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு, ஒவ்வொரு மாதத்திலும், குறைதீர்ப்பு முகாம் நடந்து வருகிறது. ஆனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும், பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு, இதுவரை, குறைதீர் முகாம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், 'அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளி, விடுதிகளைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு, மாதந்தோறும், குறைதீர் முகாம்கள் நடத்த வேண்டும்' என, அனைத்து மாவட்ட நல அலுவலர்களுக்கு, நலத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகளாக நடந்து வந்த ஆசிரியர் காப்பாளர்களின் போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது.