மதுரை காமராஜ் பல்கலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள், மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
பல்கலைக்கு எதிராக செயல்பட்ட புகாரின்படி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் சிலரை "சஸ்பெண்ட்' செய்து, "சிண்டிகேட்' முடிவு செய்தது. இதை எதிர்த்து, டிச., 4 முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டதால்,
வகுப்புகள் மற்றும் விடுதிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் பிறகும், பல்கலையில் இருந்து வெளியேற மறுத்த மாணவர்கள் சிலர், சமையல் செய்து போராட்டம் நடத்தினர். இதில் மேலும் சில மாணவர் அமைப்புகள் பங்கேற்று, ஆதரவு தெரிவித்தன. ஏ.டி.எஸ்.பி., கோபால்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போட்டி போராட்டம்:
மாணவர்கள் சிலர் துணைவேந்தர் அறைக்கு செல்வதற்காக, அலுவலக நுழைவு கேட்டில் ஏறி உள்ளே புகுந்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். மாணவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்கலை துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் போட்டி போராட்டம் நடத்தி, மாணவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், மோதல் நிலை ஏற்பட்டது. ஆர்.டி.ஒ., ஆறுமுகம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து, 252 மாணவர்கள், 10 பேராசிரியர்களை கைது செய்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.