சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுவரும் பல்வேறான தேர்வு
நடைமுறை சீர்திருத்தங்களின் வரிசையில், பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் பதில்
தாள்களை(answer sheet) மறு மதிப்பீடு செய்யக்கோரும் வசதியை
அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பு, CBSE மாணவர்கள் திருத்தப்பட்ட தங்களின்
பதில் தாள்களின் நகலை மட்டுமே பெற முடியும். இந்தாண்டு தேர்வெழுதும்
மாணவர்களுக்கு மறு மதிப்பீடு செய்யக்கோரும் புதிய வசதி கிடைக்குமென்று
தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது: மாணவர்கள்,
தாங்கள் எழுதியவற்றில் எந்தெந்தக் கேள்விகளுக்கான பதில்களை மறுதிருத்தம்
செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடவும் முடியும்.
இதற்கான வசதிகள் மாணவர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளன. முற்றிலும் ஆன்லைன் முறையிலேயே இந்த செயல்பாடுகள்
நடைபெறும். தேர்வுக் கமிட்டி, இந்தப் புதிய நடைமுறைக்கு ஒப்புதல்
அளித்துள்ளது.
அதேசமயம், தற்போதைக்கு, ஆங்கிலம், இந்தி,
இயற்பியல், வேதியியல், கணிதம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல்
உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே மேற்கண்ட மறுமதிப்பீட்டு வசதியைப் பெற
முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.