இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு, மாநில பதவி முன்னுரிமை பட்டியலின் படி நடந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
ஏனெனில் ஒரு இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு
வாயிலாக தொடக்கப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றுவிட்டால் அடுத்த ஒன்றியத்துக்கு செல்ல முடியாத நிலையே இன்றுவரை நிலவி வருகிறது.அப்படியே மாறுதல் வேண்டுமெனில் இடைநிலை ஆசிரியராக பதவி இறக்கம் பெற்றே செல்ல முடியும். ஏன் இந்த அவலநிலை தோழர்களே! அது மட்டுமா ஒரு ஒன்றியத்தில் இருந்து வேறு ஒன்றியத்துக்கு குடும்ப சூழல் காரணமாக மாறுதலில் சென்றால் அந்த ஆசிரியரின் அவலநிலையை சொல்லவே வேண்டாம். அவர் எவ்வளவு ஆண்டுக்காலம் பணியாற்றியவராக இருந்தாலும், மாறுதலான ஒன்றியத்தில் இளையவராகத்தான் செல்ல முடியும். காலம்காலமாக உள்ள ஒர் அபத்தமான நடைமுறை நம் தொடக்கக் கல்வித் துறையில் உள்ளது.ஓர் இடைநிலை ஆசிரியராக நான் ஒன்று கேட்க விருப்பப்படுகிறேன், ஒவ்வொரு ஆசிரியரையும் என்ன அவரவர் சொந்த இருப்பிட ஒன்றியத்திலேயா பணிஅமர்ததப்பட்டார்கள்? இல்லையே, பிற ஒன்றியத்தில்(பிற மாவட்டமும் கூட) பணியமர்த்தினால் சொந்த ஒன்றியத்திற்கு வர கூடாதா?
அவ்வாறு சொந்த ஒன்றியத்திற்கு மாறுதல் கேட்டதற்கு தண்டனையா இந்த பதவி உயர்வு பட்டியலில் கடைசிநிலை. இப்படி பல அவலநிலைகள் இந்த ஒன்றிய அளவிலான முன்னுரிமைப் பட்டியலில் காணப்படுகிறது.அதனால் மாநில முன்னுரிமையே இந்த அனைத்து குறைகளுக்கும் தீர்வாக அமையும்.இதை சொன்னால், மாநில முன்னுரிமை எல்லாம் சாத்தியமில்லை அதையெல்லாம் நிர்வகிக்க முடியாது, என துறையும் ஏன் சில சங்கங்களின் பிரதிநிதிகளும் சொல்லலாம்.அவ்வாறு சொன்னால் நான் ஒன்றேஒன்று மட்டும் அவர்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன் - நிர்வாகம் செய்ய இயலாது எனில் ஏழு கோடி மக்களை திறம்பட நிர்வாகம் செய்யும் அரசால் ஓர் துறையை நிர்வாகம் செய்யமுடியாதா?
ஆசிரியர்களின் கண்ணாடி என சொல்லப்படும் பணிப்பதிவேட்டையே ஆன்லைனில் பதிவு செய்யும் அளவிற்கு துறை வளர்ச்சி அடைந்துள்ளபோது மாநில அளவிலான ஓர் பதவி உயர்வு பட்டியலை தயாரிக்க முடியாதா என்ன? ஊராட்சியின் நிர்வாகப் பிடியிலும் தொடக்கப்பள்ளிகள் இல்லை, அனைத்து ஆசிரியர்களும் அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறார்கள். பின்பு ஏன் இந்த அவல நிலை?