தொண்டி அருகே, வேன் விபத்தில் 3 மாணவ, மாணவிகள் பலியானதை அடுத்து கவலையடைந்த பெற்றோர்கள்,
தொண்டி பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து சொந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்தனர். தொண்டியிலிருந்து 2 கி.மீ.தூரத்தில் உள்ளது. நம்புதாளை. இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தொண்டி தனியார் பள்ளிகளில் படித்து வந்தனர். மார்ச் 7ம் தேதி பள்ளி முடிந்து வேனில் சென்றனர். வேன் டிரைவர், லாரியை அதிவேகமாக முந்தி சென்ற போது எதிரே வந்த லாரியில் மோதியதில் நம்புதாளையை சேர்ந்த 3 மாணவ, மாணவிகள் இறந்தனர். இதனால் கவலை அடைந்த பெற்றோர்கள், குழந்தைகளை நம்புதாளை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் சேர்த்தனர். நம்புதாளை பெரியசாமி, ஆறுமுகம், குழந்தைநாதன் ஆகியோர் கூறியதாவது: இப்பிரச்னை குறித்து பெற்றோர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, தொண்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு டி.சி. வாங்கி, நம்புதாளையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்த்தோம் என்றனர்