சங்கரன்கோவிலுக்கு, முதல்வர் வருகையின் போது
பல்கலை., மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால் கல்லூரிகளுக்கு
விடுமுறை விடப்பட்டது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக சங்கரன்கோவில், புளியங்குடி,
கோவிந்தப்பேரி, நாகம்பட்டி, பணகுடி, திசையன்விளை ஆகிய இடங்களில் மனோ
கல்லூரிகள் செயல்படுகின்றன. சங்கரன்கோவிலில் கடந்த 14 ஆண்டுகளாக செயல்படும்
மனோ கல்லூரி வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. சொந்த கட்டடம் கட்டக் கோரி
சங்கரன்கோவிலில் இடைத்தேர்தலின் போது, பிரசாரத்திற்கு வந்த அமைச்சர்களிடம்
கோரிக்கை வைத்தனர். கோரிக்கை நிறைவேறாததால் நாளை சங்கரன்கோவிலில்
ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கமாவட்ட செயலாளர்
அசோக் கூறுகையில், அனைத்து மனோ கல்லூரி மாணவ, மாணவிகளை ஒன்றிணைத்து
சங்கரன்கோவிலில் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். 19, 20, 21 ஆகிய மூன்று
நாட்கள் போராட்டம் நடக்கும் என தெரிவித்தார். முதல்வர் ஜெ., நாளை காலை
சங்கரன்கோவிலில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். எனவே அவர் வரும் போது
போராட்டம் நடத்தினால் பிரச்னையாகும் என்பதால் போராட்டத்தை முறியடிக்க
அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முயற்சி மேற்கொள்கின்றனர்.
இதனிடையே அனைத்து மனோ கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.