பாபநாசத்தில் உள்ள தேர்தல் பயிற்சி வகுப்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யாததால் ஆசிரியர்கள் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் நடந்தது. பயிற்சி வகுப்பில் 1,350 பேர் பங்கேற்றனர். இதில் மண்டல அலுவலர் முகமது பாதுஷா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருவேங்கடம், பாபநாசம் தாசில்தார் அருண்மொழி, தேர்தல் துணை தாசில்தார் ரகுராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு தண்ணீர், டீ, மதிய உணவு ஏற்பாடு செய்யவில்லை. இதை கண்டித்து 1000க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மதியம் பயிற்சியை புறக்கணித்து தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் 15 நிமிடம் நடந்தது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளோம். பிற மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு கிடையாது. வேலை நாட்களில் பயிற்சி வகுப்பு வைக்கின்றனர். அரசு விடுமுறை நாளில் ஏன் பயிற்சி வகுப்பை வைத்துள்ளனர். பயிற்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகை என்னவானது. ஓட்டுபோடும் இயந்திரத்தை வைத்து டெமோ செய்து காண்பிக்கவில்லை. முறையான பயிற்சி இல்லை. இந்த பயிற்சியை வைத்து கொண்டு தேர்தல் வேலை பார்க்க முடியாது என்றனர்