ஓய்வூதியர்களுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து, ஓய்வுபெற்ற அலுவலர்
சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர்
கொ.சி. கருப்பன் கடந்த இரண்டு
நாட்களாக விளக்கம் அளித்துவருகிறார். அவர் மேலும் பல விவரங்களை சொல்கிறார்.
நல நிதி திட்டத்தைப் போலவே, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான காப்பீடு
திட்டம் குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ஓர் அரசாணை
வெளியிட்டது. அந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் 4 ஆண்டுக்கு ஒருமுறை
ரூ.2 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும். இதற்கு ஓய்வூதியத்தில்
பணம் பிடித்தம் செய்யப்படாது. ஆனால், இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு
வரும் என்பது குறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லை. அநேகமாக விரைவில்
அறிவிப்பு வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில்
இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில், விருப்ப ஓய்வூதியம் (வி.ஆர்.எஸ்.)
பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
பொதுவாக நல நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் சிகிச்சை பெறவில்லை
என்றாலும்கூட அவர்களது ஓய்வூதியத்தில் இருந்து மாதம் ரூ.150 பிடித்தம்
செய்யப்படும். குடும்பப் பாதுகாப்பு நிதியைப் பொருத்தவரை ஓய்வூதியர் இறந்த
பிறகு, ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் இது ரூ.25 ஆயிரமாக
வழங்கப்பட்டது. இதற்கு மாதம் 20 ரூபாய் வீ்தம் ஓய்வூதியத்தில் பிடித்தம்
செய்யப்படுகிறது. முன்பு 12 மாதங்கள் முழுமையாக 20 ரூபாய் பிடித்தம்
செய்யப்பட்டால் மட்டுமே குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஒரு மாதம் 20 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டாலே குடும்ப பாதுகாப்பு
நிதி வழங்கப்படுகிறது.
ஓய்வூதியர்கள் இறந்த பின்பு 2 மாதங்களில் இந்த குடும்பப் பாதுகாப்பு நிதி
வழங்கப்படும். ஒருவேளை ஓய்வூதியருக்கு மனைவி இருந்தால் அவருக்கு அந்த தொகை
நேரடியாக வழங்கப்படும். இல்லாவிட்டால், ஓய்வூதியர் தனது வாரிசுதாரராக
குறிப்பிட்டிருக்கும் நபருக்கு குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்கப்படும்.
ஒரு வேளை ஓய்வூதியர் அல்லது குடும்ப ஓய்வூதியர், ஓய்வூதியம் பெறும் ஒரு
மாதத்துக்குள் இறக்க நேரிட்டால், வங்கியில் உள்ள அந்த ஓய்வூதியம்,
சம்பந்தப்பட்ட மகன், மகள் உள்ளிட்ட ரத்த உறவுகளிடம் வழங்கப்படும்.
இந்த தொகை வாழ்நாள் நிலுவைத் தொகை (எல்.டி.ஏ.) என குறிப்பிடப்படுகிறது.
இதற்காக படிவம் 16-ஐ சம்பந்தப் பட்ட ஓய்வூதியர் அல்லது குடும்ப
ஓய்வூதியர்கள் இருக்கும் சமயத்திலேயே கருவூலத்தில் சமர்ப்பிப்பது நல்லது.
தற்போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளதால்
10-04-2004க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர் களுக்கு நல நிதி,
குடும்பப் பாதுகாப்பு நிதி ஆகியவை பொருந்தாது.