விசாரணையின் போதும் வழக்கை ஒத்திவைக்க கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
199ம் ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாப்பின் ராஜ்புரா பகுதியில் செல்வதற்கு அனுமதி வாங்க சென்ற டிராக்டர் உரிமையாளரிடம், அரசு ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான வழக்கில் 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாட்சி தனது சாட்சியத்தை விசாரணை கோர்ட்டில் பதிவு செய்தார். ஆனால் அவரிடம் சுமார் 20 மாதங்களுக்கு பிறகு 2001ம் ஆண்டு மே 25ம் தேதி தான் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தாமதம் காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், விசாரணை கோர்ட் உள்ளிட்ட அனைத்து கோர்ட்டுகளையும் கடுமையாக கண்டித்துள்ளன.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், வழக்கு விசாரணைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பலமுறை கண்டித்தும் வழக்குகள் ஒத்திவைக்கப்படுவது ஒரு தொற்று நோய் போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வழக்குகள் இவ்வாறு தாமதப்படுவதால் அது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. சாட்சிகளும் வெறுத்து போய் பிறல் சாட்சியம் அளித்து பின்வாங்குகின்றனர். இதனால் வழக்குகள் தேக்கமடைவது அதிகரிப்பதுடன் குற்றங்களும் அதிகரிக்கின்றன. அதனால் விசாரணை கோர்ட்டுகள் வழக்குகளை நாள்தோறும் விசாரிக்க வேண்டும். சாட்சிகளிடமான குறுக்கு விசாரணை முடியும் வரை வழக்கை எந்த காரணத்திற்காகவும் ஒத்தி வைக்கக் கூடாது.
மிக அதிகபட்சமாக பஞ்சாப் கோர்ட் வழக்கு விசாரணைக்கு 20 மாதங்கள் இடைவெளி அளித்து ஒத்திவைத்துள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. இது எப்போதும் இருந்து வரும் குறைபாடாக உள்ளது. நீங்கள் எப்போது தான் விழித்துக் கொள்ள போகிறீர்கள்? எதிர்தரப்பு வாதங்கள் முடிந்து, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் வரை எந்த விசாரணை நீதிமன்ற நீதிபதியும் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிடக் கூடாது. அவ்வாறு ஒத்திவைப்பதால் சமூகம் பாதிப்படுவதற்கு நாம் துணை போவதை போன்று ஆகிவிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த கண்டிப்பை அடுத்து லஞ்ச வழக்கை தானே முன்வந்து விசாரித்த பஞ்சாப் ஐகோர்ட், லஞ்சம் கேட்ட அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.