1,868 முதுகலை பட்டதாரி பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதிய தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,868 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த இடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களை தேர்ந்து எடுக்கும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தேர்வு நடத்தியது. இந்த தேர்வு கடந்த மாதம் 10-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 499 மையங்களில் நடைபெற்றது. தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள்.
முடிவு வெளியீடு
தேர்வுக்கான வினா-விடைகள் கடந்த மாதம் 22-ந்தேதி வெளியிடப்பட்டது. பின்னர் விடைகளுக்கான நிபுணர்களுடன் கலந்துபேசி இறுதியான விடை தேர்ந்து எடுக்கப்பட்டது.
அதன்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடையும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு 1:1 என்ற கணக்கில் தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அழைக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்தையும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் காணலாம்.
சான்றிதழ் சரிபார்த்தல்
சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.