தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் 65.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் முதல் தவணையாக ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 18-ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தற்போது ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) இரண்டாம் தவணையாக மாநிலம் முழுவதும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
சுகாதாரப் பணியாளர்கள்,
அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 2 லட்சம் பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் வழக்கமாக செயல்படும் 40,339 மையங்கள், சிறப்பு மையங்கள் 1,652, நடமாடும் குழுக்கள் 1,000 என 41 ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்கள் காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை செயல்பட்டன.
5 வயதிற்குள்பட்ட குழந்தைகள் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு இலக்கு நிர்ணயித்தது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் 90 லட்சம் போலியோ தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஜனவரி 18 ஆம் தினத்தன்று நடைபெற்ற முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் 66.7 லட்சம் குழந்தைகள் பயனடைந்தனர். இரண்டாம் தவணையில் 65.5 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கியதிலிருந்து கடந்த 11 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில்: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை போலியோ தடுப்பு மருந்து முகாம் நடைபெற்றது. மொத்தம் 6.6 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், நடமாடும் முகாம்கள் உள்ளிட்ட 1,500 மையங்களும்,மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு, தனியார்,தொண்டு நிறுவனப் பணியாளர்கள் என 7,000 பேர் இரண்டாம் தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டனர்.
கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதியில் 19 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒலிபெருக்கி மூலம் 30 நிமிடத்திற்கு ஒருமுறை அறிவுறுத்தப்பட்டது. மேலும், பன்றிக்காய்ச்சல்,டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டன.