தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு; புகார் தெரிவிக்க ஒரு வாரத்துக்குள் குழு அமைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கை தொடர்பான புகார்களைத் தெரிவிக்கும் நடைமுறையை எளிமையாக்கும் வகையில், கண்காணிப்பு குழுவை ஒரு வாரத்துக்குள் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது.
 "மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை பள்ளிகள் நிரப்புகின்றனவா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய உத்தரவிடவேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
 இந்த மனுவை கடந்த ஜூன் 2-ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீதத்தில், பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள மொத்த இடங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதன் இணையதளத்தில் மூன்று நாள்களுக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
 இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 அப்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பாக விரிவான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சட்டத்தின்படி எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன. அதேபோல, ஒவ்வொரு மாவட்ட அளவில் பத்திரிகை செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
 மேலும், கடந்த ஜூன் 19-ஆம் தேதி வரை இட ஒதுக்கீட்டின்படி மொத்தமுள்ள 1.17 லட்சம் இடங்களில் மாநிலம் முழுவதும் 51,394 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அவ்வாறு இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்தாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தொடர்புடைய பள்ளிகளிடமிருந்து உரிய விளக்கம் பெறப்பட்ட பிறகு அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
 இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க மறுப்பது, பணம் பெறுவது உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் தெரிவித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை எளிமையாக்கும் வகையில் கண்காணிப்புக் குழுவை ஒரு வாரத்துக்குள் அரசு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் அக்டோபர் 9-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...