கடும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் கீழாக முதன்முறையாக குறையவுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலகவங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : மக்களின் அதீத வறுமை சதவீதம், வரலாற்றில் முதல்முறையாக 10%க்கும் கீழாக சரியவுள்ளது. கடும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, இந்தாண்டு இறுதியில் 70.2 கோடியாக குறையவுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 9.6 சதவீதம்.இதுவே கடந்த 2012ல் 13%ஆகவும், 1999ல் 29%ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவிலும், ஆப்ரிக்காவின் சஹாரா பகுதியிலும் வறுமையின் பிடியில் அதிகமானோர் சிக்கியுள்ளனர். வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், சுகாதாரம், கல்விதுறையில் அதிகளவிலான முதலீடும் இச்சரிவுக்கு முக்கிய காரணம்.
ஒருநாள் வருமானம் 125 ரூபாய்க்கும் கீழ் உள்ளவர்கள் கடும் வறுமையின் பிடியில் உள்ளதாக உலகவங்கி இக்கணக்கீட்டை எடுத்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் கடும் வறுமையால் பாதிக்கப்பட்டோர் யாரும் இவ்வுலகில் இருக்கக்கூடாது என்பதே உலகவங்கியின் இலக்கு.
இச்சரிவு குறித்த முறையான அறிவிப்பை, வரும் 9-11(அக்டோபர்9-11)ம் தேதிகளில் பெரு நாட்டின் லீமா நகரில் நடைபெறும் கூட்டத்தில் உலகவங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது
