இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தானா? தகவல் ஆணையம் கேள்வி???

இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) இருந்தவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தானா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் பிரத்யோத் குமார் மித்ரா என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவை ஆட்சிபுரிந்து வந்த பிரிட்டீஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதற்காக இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நாட்டின் பல்வேறு
பகுதிகளில் இருந்து ஆட்களைத் திரட்டி இந்திய தேசிய ராணுவத்தில் இணைத்தார்.
ஆனால், சில காலத்துக்குள்ளாக எனினும், இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் யாரும் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படவில்லை. பிரிட்டீஷ் ராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் என்பதால் அவர்கள் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது. உண்மையிலேயே, இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தானா அல்லது பிரிட்டீஷ் ராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களா? என அந்த மனுவில் தகவல் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைப் பரிசீலித்த உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்துக்கு இந்த மனுவை அனுப்பியது.
இந்த மனுவை ஆய்வு செய்த தேசிய ஆவணக் காப்பகம், அதுதொடர்பான சில ஆவணங்களை மனுதாரருக்கு அனுப்பி வைத்தது. அதிலிருந்து தேவையான தகவலை எடுத்துக்கொள்ளுமாறும் மனுதாரரிடம் தெரிவித்தது.
இதனால் அதிருப்தியடைந்த மனுதாரர், இதுதொடர்பாக தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். அதன் விவரம்: ஆவணங்கள் அல்லது கோப்புகள் தொடர்பாக தகவல்களைக் கோரும்போது, அதனை தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைப்பது உள்துறை அமைச்சகத்தின் உரிமைதான்.
ஆனால், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிய இந்திய தேசிய ராணுவத்தினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற அந்தஸ்து வழங்கப்படாததற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டியது உள்துறை அமைச்சகத்தின் கடமையாகும். இதனைத் தெளிவுபடுத்துவதன் மூலமாகவே இந்திய தேசிய ராணுவத்தினர் மீது படிந்திருக்கும் களங்கத்தை துடைக்க முடியும்.
எனவே, இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் இந்த மனுவுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என தனது உத்தரவில் ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...