ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக உள்ளது என்று அண்மையில்
சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவித்தது. இதையடுத்து கேட்டரிங் சேவைகளை இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக்கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி), கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில் “ரயில்களில் தினமும் சுமார் 11 லட்சம் உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், கேட்டரிங் குறித்து தினமும் சராசரியாக 23 புகார்கள் மட்டுமே வருகின்றன. கடந்த 6 மாதங்களில் தரமற்ற உணவு விநியோகம் தொடர்பான புகார்களில் 7 ஒப்பந்ததாரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவும், உணவு தரத்தை மேம்படுத்தவும் பேன்டரி கார் உணவு சப்ளை நிர்வாகம் அனைத்தும் ஐ.ஆர்.சி.டி.சி. வசம் மாற்றப்பட இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன” என ரயில்வே வாரிய உறுப்பினர் ஜாம்ஷெட் தெரிவித்துள்ளார்.
மேலும், “பேன்டரி கார்களில் உணவு தரம், தூய்மை, விலை விவரம் பற்றி தணிக்கை செய்யும் பணி இரண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சதாப்தி, ராஜதானி, துரந்தோவில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உணவுக்கும் சேர்த்து கட்டணம் கட்டாயமாக செலுத்த தேவையில்லை. இது அவர்களின் விருப்பத் தேர்வாகும்” என்று கூறியுள்ளார்