கேரளாவின் கொல்லம் நகரில், பெண் பல் டாக்டர் ஒருவர்
போதையில் கார் ஓட்டி, ஆறு கார்களை சேதப்படுத்தினார்; மூன்று பேரை காயப்படுத்தினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
சொகுசு காரில் உலா
கேரளாவின் கொல்லம் நகரில் உள்ள அஸிஸியா மருத்துவ கல்லூரியில், பல் டாக்டராக பணியாற்றி வருபவர் ரேஷ்மா பிள்ளை. இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு , மது போதையில் சொகுசு கார் ஓட்டி சென்றுள்ளார். காரில் அவரது நண்பர்கள் இருந்தனர். மதனந்தா ஜக்ஷன் பகுதியில் கார் கட்டுப்பாட்டை மீறி, ஆறு கார்கள் மீது மோதியது. இதில் மூன்று பேர் காயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் டாக்டர் ரேஷ்மா உள்ளிட்டவர்களை பிடிக்க முயன்றனர். அவர்களை ரேஷ்மாவும் அவரது நண்பர்களும் தாக்கி உள்ளனர். பின்னர் அவர் கொல்லம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது காரில் இருந்து நான்கு மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கொல்லம் போக்குவரத்து போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்ற போதும், கடும் ரகளையில் ஈடுபட்டார் என போலீசார் தெரிவித்தனர்