ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு
செய்யும் என்று நாளை ஓய்வு பெறவுள்ள தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரான நஜீம் சைதி நாளை ஜூலை 6 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இன்று ஜூலை 5ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நஜீம் சைதி,' ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிகளவில் பணப் பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசித்து, அந்த தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதைத் முழுமையாக தடுக்கும் விதமாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு என்பது முடிந்ததும், ஆணையம் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடலாம்' என்று தெரிவித்தார்.