இலவச எரிவாயு (எல்பிஜி) இணைப்பு பெற விரும்பும் ஏழைப் பெண்கள்
அதற்காக ஆதார் எண் கோரி விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.
பிரதம மந்திரி உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு பெற விரும்புவோர் ஆதார் எண்ணைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு ஆதார் இல்லாதவர்கள் மே 31-ஆம் தேதிக்குள் அதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது. அது தொடர்பாக மார்ச் 6-ஆம் தேதி ஓர் அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தக் காலக்கெடுவை வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கும் அரசிதழ் அறிவிக்கையை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
முன்னதாக, 5 கோடி ஏழைப் பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் இலவச எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காக பிரதம மந்திரி உஜ்வலா யோஜனா திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.
தூய்மையான சமையல் எரிவாயுவை வழங்குவதே இதன் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2.6 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தனிநபர் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் எண் கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று மார்ச் 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆதார் கோரி விண்ணப்பித்தவுடன், அதற்கான ஒப்புகைச் சீட்டை சமர்ப்பித்து எந்த ஒரு பயனாளியும் இலவச எரிவாயு இணைப்பு கோரி விண்ணப்பிக்க முடியும். அந்த விண்ணப்ப மனுக்களுடன் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு அடையாள அட்டைகளில் ஒன்றை இணைக்க வேண்டும்.
ஆதார் எண் கோரி பதிவு செய்வதற்கு உரிய வசதிகளைச் செய்து தருமாறு அரசுக்குச் சொந்தமான சில்லறை விலைபெட்ரோல் நிலையங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்
டுள்ளது.
மத்திய அரசு தற்போது ஒரு குடும்பத்திற்கு ஓராண்டுக்கு 14.2 கிலோ எடை கொண்ட 12 எரிவாயு உருளைகளை வழங்குகிறது. அதற்கான மானியமானது தனிநபர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. அதன்பின் அவர்கள் சந்தை விலைக்கு உருளைகளை வாங்குகின்றனர்