கறுப்புப் பணப் பதுக்கல் குறித்த தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வ
தற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, சுவிட்சர்லாந்து அரசு அந்நாட்டு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். இந்தப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. பொதுவாக, தங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை சுவிஸ் அரசு பாதுகாப்பாக வைத்திருக்கும். இதன் காரணமாக இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றைச் சேர்ந்த பணக்காரர்கள் தங்களின் பணத்தை சுவிஸ் வங்கிகளில் வைத்துள்ளனர்.
எனினும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் சுவிஸிடம் கேட்டுக்கொண்டன. இதையடுத்து இந்தத் தகவல்களைத் தர சுவிஸ் சம்மதித்தது. அதன் ஒருபகுதியாக இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வகை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன. இது குறித்த தகவல்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு வழங்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது. முதற்கட்டத் தகவல்கள் 2019ஆம் ஆண்டில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கறுப்புப் பணப் பதுக்கல் குறித்த தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, சுவிட்சர்லாந்து அரசு தன்னுடைய அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா உட்பட 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கிகளில் கணக்கு தொடங்கும்போது உடனடியாக அந்தந்த நாடுகளுக்குத் தகவல் தானாகவே சென்றுவிடும். இந்தப் புதிய வசதி 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டத் தகவல் 2019ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்குக் கிடைக்கும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இனி எந்தத் தாமதமும் மேற்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவுடன் கறுப்புப் பணத் தகவல்கள் பரிமாற்றத்துக்கு, அந்த நாட்டின் தரவு பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை சட்டங்கள் போதுமானதாக இருப்பதை சுவிட்சர்லாந்து உணர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணத்தை டெபாசிட் செய்வது குறைந்துள்ளதாக சுவிஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற தெற்காசிய நாடுகளில் அவர்கள் பணத்தை பதுக்கத் தொடங்கிவிட்டனர் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.
