சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு விபத்துகள் ஏற்படுவதாக மாநிலப்
போக்குவரத்துத்துறையின் சமீபத்திய புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. சென்னையைப் பொறுத்தவரை மற்ற நாள்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு விபத்துகள் நடப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் நிகழும் விபத்துகளில் 20 சதவிகிதம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்படுகின்றன. கடந்த 18 மாதங்களில் சாலை விபத்துகள் மூலம் 1,000 பேர் இறந்துள்ளனர். இதில் ஐந்தில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையில் மரணமடைந்துள்ளார்.
கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, உள்வட்டச் சாலை ஆகியவற்றில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. வார நாள்களில் மற்ற பகுதிகளில் ஏற்படும் விபத்துகளைவிட ஞாயிற்றுக்கிழமை இப்பகுதிகளில் இருமடங்கு அதிகமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளில் 60 சதவிகிதம் அதிகாலை நேரத்திலேயே நிகழ்கின்றன என்றும் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
“வார இறுதியில் சாலைகள் காலியாக இருக்கும். இதனால் ஓட்டுநர்கள் அதிவேகமாகத் தங்கள் வாகனங்களை ஓட்டுகின்றனர். பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே. இளைஞர்களில் அதிகமானோர் சனிக்கிழமை இரவுகளில் குடித்துவிட்டுப் பந்தயம் செல்கின்றனர். இவர்கள் விபத்துகளில் சிக்கும்போது ஞாயிற்றுக்கிழமை அதிகாலைகளில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர்” என்று இது தொடர்பாகப் போக்குவரத்துத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
“வேகமான பயணம், மது அருந்திவிட்டு ஓட்டுவது ஆகியவையே விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.
