டெல்லியில் உள்ள பாரத் சன்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) நிறுவனம் ஆன்லைன்
பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் மொபைல் வாலட் (கைப்பேசி வழியாகக் கட்டணம் செலுத்துவதற்கான செயலி) ஒன்றை நேற்று (17.08.2017) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 10 கோடி வாடிக்கையாளர்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்தியாவின் இ-காமர்ஸ் துறை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பி.எஸ்.என்.எல் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நேற்று நடந்த நிகழ்வில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா இந்த டிஜிட்டல் வாலட்டை அறிமுகம் செய்தார். இந்த செயலி பி.எஸ்.என்.எல் நிர்வாகத்தின் சார்பில் மொபிக்விக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிர்வாகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீநிவஷ்தவா கூறும்போது, "இதன்மூலம் பி.எஸ்.என்.எல் பணமில்லா பரிவர்த்தனைகளை மட்டும் ஊக்குவிக்கவில்லை. பி.எஸ்.என்.எல் தொழிலும் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக மொபிக்விக் நிறுவனத்துடன் பி.எஸ்.என்.எல் மூலோபாய கூட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், பிரதமரின் திட்டங்களான 'மேக் இன் இந்தியா' மற்றும் 'கேஷ் லெஸ் இந்தியா' திட்டங்களுக்கு பி.எஸ்.என்.எல் மொபைல் வாலட் புதிய மைல் கல்லாக இருக்கும் "என்றார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாகவே பி.எஸ்.என்.எல் நிர்வாகம் இழப்பைச் சந்தித்து வரும் சூழலில் பி.எஸ்.என்.எல்-இன் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு புதிய யுக்தியாக மொபைல் வாலட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
