பல் சுகாதாரம் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும்வகையில் சென்னை
போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை மைதானத்தில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 23,615 பேர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் பல் துலக்குவதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டனர். இதனால், அங்கு பிரமாண்டமான கூட்டம் காணப்பட்டது. இந்நிகழ்ச்சியை இந்திய பல் சங்கம் (ஐடீஏ), சர்வதேச கழகம் (ரோட்டரி இன்டர்நேஷனல்), எஸ்ஆர்யு-வின் பல் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் கோல்கேட்-பாமோலிவ் (இந்தியா) லிமிடெட் இணைந்து நடத்தின.
இந்த விழிப்பு உணர்வு கூட்டத்தின் நோக்கம், பல்லின் முக்கியத்துவத்தை உணர்தல், நாள்தோறும் பல் துலக்குதல், பல் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள், பல் துலக்காவிடில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்பு உணர்வு பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் பிரஷ்ஷால் (Brush) பல் துலக்கி விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணி கூட்டம் ஆசிய அளவில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. மேலும், கின்னஸ் சாதனையும் படைக்கவிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பல் சுகாதாரம் சங்கத் தலைவர் தமிழ்செல்வன் கூறியதாவது, “பல் சுகாதாரம் என்பது மனிதனின் ஒட்டுமொத்த சுகாதாரத்திலும் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. ஆனால், பல் சுகாதாரத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பற்களின் நலமே சுகாதாரத்துக்கு நன்மை பயக்கும், பல் நலனை பேணுவதை நாம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
சென்னையில் நடைபெற்ற இந்த விழிப்பு உணர்வு பேரணி மிகப் பெரிய சாதனை படைத்துள்ளதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.