தமிழக அரசியலைப் போன்று அரசுப் பள்ளியிலும் தேர்தல்
நடத்தி தலைவியாக மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கெட்டுப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 180 மாணவ, மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தமிழக அரசியலைப் போன்று தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில் எட்டு பேர் போட்டியிட்டதில் எட்டாம் வகுப்பு படிக்கும் கலைவாணி என்ற மாணவி மற்றவர்களை விட அதிகட்பட்சமாக 32 வாக்குகள் அதிகம் பெற்று தலைவியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 71ஆவது சுதந்திர தினமான இன்று கலைவாணி தலைவியாகப் பதவி ஏற்கவுள்ளார்.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் நரசிம்மன் கூறுகையில், “தேர்தல் ஆணையத்தால் எவ்வாறு தேர்தல் நடத்தப்படுகிறதோ, அதேபோன்று வாக்குச்சாவடி, வாக்குச்சீட்டு, அழியாத மை, வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பெட்டி, வாக்கு எண்ணிக்கை ஆகிய நடைமுறைகளில் தேர்தல் நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக ஆசிரியர் கருணாநிதியும், தேர்தல் அலுவலராக ரவிக்குமாரும், வாக்குச்சாவடி தலைமை அலுவலராக ஆசிரியர் கலைமதியும், வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள் முருகன், கந்தன் மற்றும் புனிதா ஆகியோரும் செயல்பட்டனர்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. 132 வாக்குகளில் 97 சதவிகிதம் பதிவானது. இதில், மாணவி கலைவாணி அதிகமாக 32 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உண்மையான தேர்தல் போன்று, நடத்தப்பட்டதால், மாணவர்களுக்குத் தேர்தல், வாக்கு எண்ணிக்கை குறித்து விழிப்பு உணர்வு கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
