குர்கானில் ரெயான் பள்ளியில் 7 வயது சிறுவன், கழிப்பறையில் கழுத்தறுத்து கொலை
செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பிறகு பெற்றோர்கள் மத்தியில் பள்ளிகளின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு குறித்து பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் பெற்றோர்களிடையே எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிய ஸ்கூல் லேனர்கஸ் நெட்வொர்க் என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இதில், 72 சதவீதம் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகள் பாதுகாப்பான இடம் என்ற நம்பிக்கை போய் விட்டதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை உள்ளதாக 59 சதவீதம் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற சம்பவங்களுக்கு தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என 44 சதவீதம் பேரும், பள்ளி நிர்வாகமே பொறுப்பு என 62 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பிறகு பள்ளிகள் மீது நம்பிக்கை இழந்து, ஒருவித அச்சத்துடனேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக பெரும்பாலான பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்