ஜூலை மாத இறுதி வரையில் இந்தியாவின் நிதிப்
பற்றாக்குறை பட்ஜெட்டில் 92.4 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
பொதுக்கணக்கரின் தகவலின்படி, 2017-18ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை வருவாய்க்கும் செலவுக்கும் உள்ள வித்தியாசம் 5.04 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதே காலகட்டத்தில் அதற்கு முந்தைய 2016-17ஆம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் 73.7 சதவிகிதமாக இருந்துள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவிகிதமாகக் குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கடந்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதமாக இருந்தது.
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம்வரை அரசாங்கத்தின் வருவாய் வரவுகள் 2.91 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக பொதுக்கணக்கரின் தகவல் கூறுகிறது. இது முழு ஆண்டிற்குமான இலக்கான 15.15 லட்சம் கோடி ரூபாயில் 19.2 சதவிகிதம் ஆகும். கடந்த நிதியாண்டில் வரிகளுடன் வருவாய் வரவு, இலக்கில் 18.6 சதவிகிதமாக இருந்தது. பொதுக்கணக்கரின் தகவலின் படி, அரசின் செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஜூலை இறுதி வரையில் அரசின் செலவு மொத்தமாக 8.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. வெளாண் அமைச்சகம், நுகர்வோர் விவகார அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை கடந்த ஆண்டை விட அதிகம் செலவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.