காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பி. முத்துகருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கொடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், பல நாட்களாக போராடியும் எந்த பலனும் இல்லை, அதனால் மனவேதனையுடன் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
ராஜினாமா முடிவில் பின்வாங்க மாட்டேன். அரசியலுக்காக குடிக்க தண்ணீர் கூடவா தரக்கூடாது? எனவும் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் முத்துக்கருப்பன். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன. இவரது பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. இந்த நிலையில் முத்துக்கருப்பன், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சனிக்கிழமை 30-ம் தேதி அறிவித்தார்.
அதன்படி, இன்று தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளிக்க உள்ளதாக அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் கூறியதாவது:- “ காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவது மனவேதனை அளிக்கிறது முதலமைச்சர், துணை முதலமைச்சர் சமாதானம் செய்வார்கள் என செல்ஃபோனை அணைத்து வைத்து விட்டேன்
கடுமையான சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்த பிறகும் தாமதப்படுத்துகின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் செய்யப்படும் அநீதியை மனம் ஏற்கவில்லை. ராஜினாமா கடிதத்தை, காலை 10.45 மணிக்கு, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளிக்க உள்ளேன்” என்றார்.
