அரசு நிர்வாகத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.
கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று புதுச்சேரி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் நாராயணசாமி. அப்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தகவல் தொடர்பு அமைப்புகளின் வழியாக அதிகாரிகளுக்கு உத்தரவிடவோ, தகவல் தெரிவிக்கவோ கூடாது என புதுச்சேரி அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். வாட்ஸ்அப் என்பது அரசினால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்று கூறினார்.
இதுகுறித்த ஆணையானது, புதுச்சேரி அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தன் பேச்சில் குறிப்பிட்டார் நாராயணசாமி. இதை மீறும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். “பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட செயலாளருக்கோ, அமைச்சருக்கோ அனுப்பிவைத்து, முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று, அதன் பிறகே நடவடிக்கை எடுக்க முடியும். அதை மீறி வாட்ஸ்அப்பில் உத்தரவு போடுவது என்பது அங்கீகரிக்கப்படாத ஒன்று” என்று கூறினார். பழிவாங்கும்விதமாக யார் வேண்டுமானாலும் வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கக்கூடும் என்று, அவர் இதற்குக் காரணம் தெரிவித்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி தகவல் அனுப்பி வருகிறார். இதனால், அவரைக் குறைசொல்லும் விதத்திலேயே நாராயணசாமி இதனைத் தெரிவித்ததாகக் கருதப்பட்டது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 16) புதுச்சேரியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற கிரண் பேடி, அரசு நிர்வாகத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று குறிப்பிட்டார்.
“தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கம்தான் சமூக வலைதளங்கள். இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. அவசரமாகத் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள சமூக வலைதளங்கள் வசதியாக உள்ளன. எனவே வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதில் தவறில்லை” என்று கூறினார் கிரண்பேடி.
