அரசு ஊழியர்களுக்குப் போதைப் பொருள் பரிசோதனை நடத்தப்படும் என்ற முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது அங்குள்ள அரசு ஊழியர்கள் சங்கம். அதே நேரத்தில், இந்த அறிவிப்பில் முதலமைச்சர் உட்பட அரசியல்வாதிகளை சேர்க்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் போதை மருந்து கடத்தல், விற்பனை மற்றும் பயன்பாடு அதிகமிருப்பதாகக் குற்றம்சாட்டி வருகின்றன எதிர்க்கட்சிகள். கடந்த இரண்டு வார காலமாக, போதைப் பொருள் பயன்பாட்டில் சீரழிந்த குடும்பத்தினர் பற்றிய வீடியோக்கள் அதிகமாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் பஞ்சாபில் போதைப் பொருள் பயன்படுத்தியதால் 23 பேர் மரணமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 2ஆம் தேதியன்று சண்டிகரில் அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையில் அமைச்சரவை கூடியது. போதை மருந்து கடத்தலில் முதன்முறையாகச் சிக்கியவர்களுக்கும் மரண தண்டனை அளிக்குமாறு சட்டத் திருத்தம் செய்ய, இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பரிந்துரை மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் தேதியன்று, அரசு ஊழியர்களுக்குக் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவித்தார் அமரீந்தர் சிங். பணி நியமனம், பணி உயர்வு மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின்போது, இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கான செயல்முறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அவர் பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் இது பொருந்தும் என்று தகவல் வெளியானது.
நேற்று (ஜூலை 5) முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் இந்த அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார் பஞ்சாப் குடியுரிமைச் செயலகக் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.கே.கேஹ்ரா. பஞ்சாப்பில் உள்ள அரசு ஊழியர்களிடம் போதை மருந்து சோதனை நடத்தப்படுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லையென்று கூறியுள்ளார். “முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இதர கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரையும் அரசின் இந்த உத்தரவு கட்டுப்படுத்த வேண்டும். அவர்களை மட்டும் சேர்க்காமல் விட்டது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
