பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த சாஃப்ட் பேங்க்குடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீனிவஸ்தவா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்தியாவில் 5ஜி மற்றும் இணையம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு மற்றும் சேவையை அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் ஜப்பானின் சாஃப்ட் பேங்க் மற்றும் என்டிடி கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஸ்மார்ட் நகரங்களுக்கான தீர்வுகளை அளிக்க நாங்கள் முயன்றுள்ளோம்.
5ஜி சேவையை அறிமுகப்படுத்த தொலைத் தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா பல்வேறு முயற்சிகளைக் கொண்டுள்ளார். இதற்காக சர்வதேச அளவிலான கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான மூலதனத்தைப் பெறும் முயற்சியாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமாகலாம்” என்றார்.
