அரசுப் பள்ளிகள் என்றொரு அடையாளம்!


கல்வியை தனியாருக்கு தாரை வார்த்துவிட்ட மத்திய – மாநில அரசுகள் அரசு கல்வி நிறுவனங்களை எட்டி பார்க்க அஞ்சுகின்றன. ”தேசத்தின் எதிர்காலம், வகுப்பறையில் நிர்மாணிக்கப்படுகிறது” என்கிற மகாத்மா காந்தியின் வார்த்தைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அறிவியல் பூர்வமான, வாழ்க்கைக்கான கல்வியை பெறும் சமூகமாக
உருவாக்காமல் பணம் பண்ணும் எந்திரங்களாக மாணவர்களை மாற்றுகிற கல்விக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில்1960ல் காமராஜர் துவக்கிய இலவசக்கல்வி, மதிய உணவுத் திட்டம் லட்சகணக்காணவர்களை அன்றைக்கு பள்ளியில் சேர்த்து படிக்கும் சூழலை உருவாக்கி 37 சதவீதத்தினரை படிக்க வைத்தது. அதன் வளர்ச்சியும், நீட்சியும் கல்வி கற்றோரின் விகிதம் 2011ல் 80.33% ஆக உள்ளது. அவற்றின் வளர்ச்சியில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய அரசுப்பள்ளிகள் அன்றைக்கும் இன்றைக்கும் தூய்மையான குடிநீர், கழிவறை, ஆய்வகம், நூலகம், அமரும் இருக்கைகள், போதிய வகுப்பறைகள், ஆசிரியர் பற்றாக்குறை, தூய்மையான உணவு இல்லாமை என இல்லாமைகளின் கூடாரங்கள் என்ற அடையாளத்தோடு இயங்கி வருகின்றன. இன்றைக்கும் 90 சதவீத அரசுப்பள்ளிகளில் லட்சகணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்கள் பயின்று வருகிற கல்விச் செலவுக்காகவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் 2012-2013 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளி கல்விக்காக ரூ. 16,965.3 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் செலவிடப்பட்டதா? இல்லை. செலவிடப்படாமல் ஓரங்கட்டப்பட்டுள்ளது. அரசின் மெத்தனம் முதல் தலைமுறை கல்வி பயிலும் மாணவர்களின் கற்றலில் விளையாடுவதாகத்தான் தெரிகிறது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தாமல், கல்வியை பெற்றோர்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளட்டும் என தன்னுடைய செலவுகளை வெட்டிச் சுருக்கிக் தன்னுடைய பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்கிறார்கள். எதிர்கால சமுதாயம் சரியான திசையில் நடைபோட வேண்டுமானால் கல்வியறிவு அவசியமானது, அவை பற்றாக்குறையோடு வழங்கப்படுவது எதிர்கால சமூகத்தை இருட்டில் விடும் போக்கிற்கு கொண்டு செல்லும் என்பதை அறியாதவர்கள் அல்ல ஆட்சியாளர்கள். 65 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வியை அனைவருக்கும் கொடுக்கும் உரிமையை 2009 ம் ஆண்டு இயற்றியது ஐமுகூ அரசு. இப்போதுதான் இதன் அவசியம் தெரியும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அவற்றிலும் வியாபாரத்திற்கு வழிவகுத்து தனியார் கல்வி நிறுவனங்களில் சாதாரண நலிந்த பிரிவு குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவித்தது. தனியார் பள்ளிகள் இவற்றை ஏறேடுத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் தங்களுடைய மேதமையை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் நலிந்த பிரிவு குழந்கைள் உயர்தர பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பயின்றால் அவர்களும் நலிந்த பிரிவு குழந்தைகளைப் போலவே நடந்துகொள்வார்கள் என தங்கள் பள்ளியில் பயிலும் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி அச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க கடிதம் எழுதியது. மனித மாண்புகளை சீர்குலைக்கும் நோக்கத்தை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். இச்சட்டத்தின் மூலம் அரசு ஆரம்பப் பள்ளிகளின் அருகாமையில் உள்ள கிராம குழந்தைகளுக்கு கல்வி அளிக்க அவர்கள் குறிப்பிட்ட வயதுக்குள் இருப்பின் அந்த வயது குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கையை துவக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எவ்வாறு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் உயிர்ப்புடன் இருக்கும். கடந்த 2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் வருகிற 6 மாத காலத்திற்குள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து மாநில அரசுகளும் குடிநீர், இருபாலருக்கான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டது. அவற்றை செயல்படுத்த மாநில அரசுகள் எந்த அவைவையும் ஏற்படுத்த வில்லை. தமிழகத்தில் பள்ளிக் கல்வியை அறிவியல் பூர்வமாக வழங்க இந்த அரசு தயாரில்லை. ஆரம்ப பள்ளியில் ஆங்கிலம் புகுத்தியவுடன் சேர்கை அதிகரித்திருப்பதாக கூறுவது அரசுப்பள்ளிகளில் ஏற்கனவே ஆண்டாண்டு காலமாக அடிப்படை வசதிகள் இல்லா நிலையை முடி மறைத்து மொழிதான் முக்கிய பிரச்சை என மழுப்புவதற்கான வேலை. புகழ்பெற்ற விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல்காலம், மயில்சாமி அண்ணா துரை, உச்சமன்ற நீதிபதி பி.சதாசிவம் போன்றோர் தமிழ்வழியில் பயின்று உயர்நிலையை அடைந்தவர்கள் தான். இன்னும் ஏராளமானவர்கள் தாய்மொழியில் பயின்று பல்வேறு துறைகளில் கோலோச்சுகின்றனர் அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களின் கற்றலுக்கு உறுதுணையாக இருப்பது கற்பிக்கும் ஆசிரியர்கள். ஆசிரியர்களும் மாணவர்களைப் போலவே கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையானால் அவர்கள் ஆசிரியர்களாக இருக்க முடியாது என புகழ்பெற்ற மூலதனம் புத்தகம் எழுதிய காரல் மார்க்ஸ் குறிப்பிடுவார். இப்போது இருக்கும் ஆசிரியர்கள் கடந்த கால எந்திரத்தனமான கல்வியை பயின்றவர்களே, மனப்பாடம் செய்து படிக்கும் முறையை அறிந்தவர்களே அவர்களும் அதே மனநிலையில் தான் இருப்பார்கள். சிலரில் மாற்றம் உண்டு, ஆசிரியரின் போதனை தான் மாணவர்களை வளப்படுத்தும், மாணவரும் ஆசிரியருக்கும் இடைவெளி இல்லாமல் கலந்ரையாடும் போது மாணவர்கள் தங்களின் கேள்விகளுக்கு உரமிடும் இடத்தில் ஆசிரியர் இருப்பர். இன்றும் மெக்காலேவின் குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறையே பின்பற்றப்படுகிறது. கற்றலிலும் கற்பித்தலில் மாற்றம் இல்லாமல் வாழ்க்கைக்கான, சமூகத்திற்கான கல்வி வழங்கப்படவில்லையானால் எதிர்காலம் சமுதாயம். நேசம், அரவணைப்பு, சமூக பொறுப்பு, அரசியல் இல்லாமல் இயந்திரத்தனமாகவே இருக்கும். இப்போதே அதை பல இடங்களில் காண முடிகிறது. இவற்றை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் வறட்சியாக இருக்கிற நிலையை மாற்றி தரத்தை உயர்த்தி கல்வியை வசந்தமாக மாற்ற வேண்டியது அரசின் கடமை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...