வாக்காளர் அடையாள அட்டை நம்பரை எஸ்.எம்.எஸ்.
மூலம் கொடுத்து, அந்த வழியில் தகவல்களைப் பெறும் புதிய முறையை
தமிழகமெங்கும் அறிமுகம் செய்ய இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி
பிரவீன்குமார் கூறினார்.
தமிழக வாக்காளர்கள்
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–
தமிழகத்தில் ஏப்ரல் 24–ந் தேதி பாராளுமன்ற
தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 வாக்காளர்கள்
உள்ளனர். அவர்களில் இரண்டு கோடியே 68 லட்சத்து 93 ஆயிரத்து 9 பேர் ஆண்கள்;
இரண்டு கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 677 பேர் பெண்கள்; 2 ஆயிரத்து 996
பேர் திருநங்கைகள்.
பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
இந்த தேர்தலில் வாக்காளர்களை சேர்ப்பதற்காக
9–ந் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாமை நடத்த உள்ளோம். ஒவ்வொரு
வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை முகாம்
நடக்கும். பெயர் திருத்தம், நீக்கம் ஆகிய நடவடிக்கைகள் இந்த முகாமில்
செய்யப்படாது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை
பார்த்துவிட்டு, பெயர் இல்லை என்றால் அங்கேயே 6–ம் எண் பாரத்தை வாங்கி
நிரப்பிக்கொடுக்க வேண்டும். இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில்
அவர்கள் பெயர் சேர்க்கப்படும்.
மற்றபடி, பெயர் சேர்ப்பது, பெயர் திருத்தங்கள்,
இடமாற்றம் தொடர்பாக மார்ச் 25–ந் தேதி வரை (வேட்புமனு தாக்கலுக்கு 10
நாட்களுக்கு முன்பு) சம்பந்தப்பட்ட அலுவலகத்திலும் வழக்கம்போல்
விண்ணப்பிக்கலாம். இந்த தேர்தலில் வாக்காளர் பெயர் சேர்க்கப்படாமல்
போய்விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எஸ்.எம்.எஸ். தகவல்
எஸ்.எம்..எஸ். மூலம் வாக்காளர் அடையாள அட்டை
நம்பரை கொடுத்தால், வாக்காளர் பெயர் பட்டியலில் அந்த அடையாள அட்டைதாரரின்
பெயர் இடம்பெற்று உள்ளதா? அவர் எந்த வாக்குச்சாவடியில் ஓட்டுபோட வேண்டும்?
என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை, பதில் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பும்
முறை பற்றி பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஆலோசித்து வருகிறோம்.
மனதில் எளிதில் பதியக்கூடிய நம்பரை தேர்வு
செய்வோம். தமிழகம் முழுவதும் இந்த நவீன முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.