இன்று நடக்கப்போவது என்ன ???

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது.


கடந்த 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ. 66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996, ஜூன் 14-ஆம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது திமுக அரசு வழக்குத் தொடுத்தது.

இதனிடையே, 2001-இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வரானார். இந்த நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என திமுக பொதுச் செயலர் அன்பழகன் அளித்த மனுவை ஏற்று, சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003, நவ.18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து இந்த வழக்கை விசாரிக்க கர்நாடக அரசு ஏற்பாடு செய்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 2004, பிப்.14-ஆம் தேதி தொடங்கியது.

இதுவரை 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.எஸ்.பச்சாபுரே, மனோலி, கிருஷ்ணப்பா, ஆன்ட்ரிக்ஸ், டி.எம்.மல்லிகார்ஜுனையா, சோமராஜு, பாலகிருஷ்ணா, முடிகெளடர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இவர்களைத் தொடர்ந்து நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா இந்த வழக்கை விசாரித்து வந்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313-இன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன. அரசுத் தரப்பு வழக்குரைஞரான பவானி சிங் 17 நாள்கள் தனது வாதத்தை முன்வைத்தார். ஜெயலலிதா தரப்பில் வழக்குரைஞர் பி.குமார், தனது தரப்பு வாதங்களை 25 நாள்கள் பதிவு செய்தார்.

இருதரப்பு வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் சனிக்கிழமை (செப்.27) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றம் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு முற்பகல் 11 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிடுகிறார்.

பலத்த பாதுகாப்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதையொட்டி, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தை சுற்றிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர ஆயுதப் படை, அதிரடிப் படையைச் சேர்ந்த ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சிறை வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அந்தப் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்காருவதற்கு தனி கொட்டகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...