நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்ஙு!

நியாய விலைக் கடை பணியாளர்கள், கட்டுநர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.51.65 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 நியாய விலைக் கடைகளில் 21,779 விற்பனையாளர்களும், 3,856 கட்டுநர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இப்போது சூழலுக்கு ஏற்ப, அவர்களது ஊதிய விகிதம் மாற்றியமைக்க ஊதிய உயர்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த அறிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டு, ஊதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
 இதன்படி, விற்பனையாளர்களுக்கு இப்போது பணியில் சேர்ந்த ஓராண்டு வரை ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியமும், ஓராண்டுக்குப் பிறகு ரூ.3,300-ரூ.8,000 என்ற ஊதிய விகிதத்தில் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. கட்டுநர்களுக்கு ரூ.3,500 தொகுப்பூதியமும், ஓராண்டுக்குப் பிறகு ரூ.3,000 முதல் ரூ.7,000 என்ற ஊதிய விகிதத்தில் ஊதியமும் வழங்கப்படுகிறது.
 ஊதிய உயர்வு எவ்வளவு: ஊதியக் குழு பரிந்துரைப்படி, விற்பனையாளர்களுக்கு ஓராண்டு பணிக்காலம் வரை வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூ.5 ஆயிரமாகவும், ஓராண்டுக்குப் பிறகு ரூ.4,300-ரூ.12 ஆயிரம் என்ற அளவிலும் உயர்த்தி வழங்கப்படும்.
 இதேபோன்று, கட்டுநர்களுக்கு ஓராண்டு வரை ரூ.4,250-ம், ஓராண்டுக்குப் பிறகு ரூ.3,900-ரூ.11,000 என்றும் உயர்த்தி அளிக்கப்படும். இந்த ஊதிய விகிதங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
 அகவிலைப்படி-இதர ஊதிய அம்சங்கள்: புதிய ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்யப்படும் அடிப்படை ஊதியத்தின் மீது 63 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும். அரசு ஊழியர்களைப் போன்று அவ்வப்போது அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.
 15 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலையில் ஓர் ஊதிய உயர்வு (அடிப்படை ஊதியத்தில் 2.5 சதவீதம்) அளிக்கப்படும். அடிப்படை ஊதியத்தில் ஆண்டுதோறும் 2.5 சதவீதம் ஊதிய உயர்வு பணியாளர்களின் இப்போதைய ஊதிய உயர்வு நாளிலேயே வழங்கப்படும்.
 ஊதிய விகிதங்களில் அதிகபட்ச நிலை அடைந்தவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என தேக்க நிலை ஊதிய உயர்வு அளிக்கப்படும். அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் வாடகைப்படி அளிக்கப்படும்.
 சென்னை, அதன் புறநகரில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதமும், இதர மாநகரங்களில் பணிபுரிவோருக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதமும் நகர ஈட்டுப்படியாக வழங்கப்படும்.
 சென்னை-இதர மாநகரங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.1000-ம், கட்டுநர்களுக்கு ரூ.500-ம் நியாய விலைக் கடைப் படியாகவும், இதர இடங்களில் பணிபுரியும் விற்பனையாளருக்கு ரூ.750-ம், கட்டுநருக்கு ரூ.375-ம் அளிக்கப்படும். விற்பனையாளர்-கட்டுநர்களுக்கு மாதம்தோறும் மருத்துவப் படியாக ரூ.100 அளிக்கப்படும்.
 மலைவாழ் பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.900-ஆகவும் மலைவாழ் படியாக அளிக்கப்படும். கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் மீட்டருக்கு மேல் உள்ள இடங்களில் பணிபுரிவோருக்கு அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதமும், அதிகபட்சம் ரூ.250-ஆகவும் குளிர்காலப் படியாக கொடுக்கப்படும்.
 இதுதவிர, மாற்றுத் திறனாளிப் படி வழங்கப்படும். நடைமுறையில் இருந்து வரும் பணியாளர் வைப்பு நிதி பிடித்தம் செய்ய அனுமதிக்கப்படும்.
 ரூ.51.65 கோடி கூடுதல் செலவு: புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்படுவதால், நியாய விலைக் கடை ஊழியர்கள் 12.14 முதல் 14.87 சதவீதம் வரை கூடுதலாகப் பெறுவர். பணிக்காலத்துக்கு ஏற்ப, மாதத்துக்கு விற்பனையாளர்கள் ரூ.997 முதல் ரூ.2,048-ம், கட்டுநர்கள் ரூ.978 முதல் ரூ.1,878 வரையிலும் அதிகமாகப் பெறுவர். இதனால் ஆண்டுக்கு ரூ.51.65 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...