ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான அண்ணா பல்கலைக்கழக இணையதளம் முதல் நாளிலேயே முடங்கியதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இணையதள திறனை மேலும் மேம்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
2016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதள பகுதியை வெள்ளிக்கிழமை (ஏப்.15) முதல் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது.
கடந்த ஆண்டுகளைப் போல மையங்கள் மூலம் விண்ணப்பப் படிவங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு பதிலாக, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்கள் முழுவதையும் ஆன்-லைனில் மட்டுமே பதிவு செய்து, அந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் நிகழாண்டு அறிமுகம் செய்துள்ளது.
முடங்கிய இணையதளம்: இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான முதல் நாளிலேயே விவரங்களைப் பதிவு செய்வதற்கான www.annaunivtnea2016.edu என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளம் முடங்கியது. இதனால் வெள்ளிக்கிழமை காலை முதலே விண்ணப்பிக்க முடியவில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக பல்கலைக்கழகத்துக்கும் தொடர் புகார்கள் குவிந்தன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறியது:
முதல் நாளில் ஏராளமானோர் விவரங்களைப் பதிவு செய்ய முயற்சித்திருப்பதாலேயே, இணையதளம் முடங்கியிருக்கலாம். இந்தச் சிக்கலை போக்கும் வகையில், பல்கலைக்கழக இணையதள திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாற்று ஏற்பாடு: மேலும், சென்னை அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள மாணவர்கள் எந்தவித சிக்கலுமின்றி விண்ணப்பிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதாவது, இணையதள இணைப்புடன் 20 கணினிகள் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட உள்ளன. விண்ணப்பதரார்கள் இந்த வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.