கட்டாய ஓய்வு பிரச்சினையில் ஆயுதப்படை மருத்துவ சேவை மையத்தில் பணிபுரிந்த பெண் டாக்டருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ராணுவ அமைச்சகத்துக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை ஐகோர்ட்டில் ஷைலா ராஜன் என்ற 62 வயது பெண் டாக்டர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கட்டாய ஓய்வு
நான் கடந்த 1971-ம் ஆண்டு மும்பை ஆயுதப்படை மருத்துவ சேவை மையத்தில் குரூப்-சி பிரிவில் டாக்டராக பணிக்கு சேர்ந்தேன். என்னுடைய இந்த பதவியை குரூப்-பி அந்தஸ்துக்கு மாற்ற அப்போதைய பொறுப்பு கர்னல் பரிந்துரை செய்தார். பின்னர், இதுபற்றி ராணுவ அமைச்சகத்திடம் கேட்டதற்கு, பதவியை மேம்படுத்த முடியாது என்று கூறி மறுத்துவிட்டனர். மேலும், இதற்கான செயல் திட்டத்தை ஊதியக்குழு தான் மேற்கொள்ளும் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் கடந்த 1992-ம் ஆண்டு முறையிட்டேன். ஆனால், என்னுடைய மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பு, ராணுவ அமைச்சகம் எனக்கு கட்டாய ஓய்வு கொடுத்துவிட்டது. இதுமட்டுமின்றி, எனக்கு 2 ஆண்டுகள் ஊதிய உயர்வையும் ராணுவ அமைச்சகம் நிறுத்திவிட்டது.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
ரூ.5 லட்சம் இழப்பீடு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.எம்.கன்னடே மற்றும் ரேவதி மோகிதே தியரே ஆகியோர், மனுதாரரின் செயலை பாராட்டாமல், அவர் கோர்ட்டை நாடினார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை கட்டாய ஓய்வு கொடுத்து தண்டித்ததற்காக ராணுவ அமைச்சகத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ராணுவ அமைச்சகத்துக்கு உத்தரவிட்டனர்