திருமண செலவுக்கு ரூ.2 லட்சம் எடுக்க கடுமையான நிபந்தனைகள் !!

வங்கி கணக்கில் இருந்து திருமண செலவுக்கு ரூ.2 லட்சம் எடுக்க கடுமையான நிபந்தனைகள் ரிசர்வ் வங்கி அறிவிக்கை வெளியிட்டது!!!


திருமண செலவுகளுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.2½ லட்சம் எடுக்க கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கும் அறிவிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.


அறிவிக்கை வெளியீடு

வங்கி சேமிப்பு கணக்கில் வாரம் ஒன்றுக்கு ரூ.24 ஆயிரம் வீதம் மட்டுமே ரொக்கமாக எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திருமண செலவுகளுக்கு ரூ.2½ லட்சம்வரை ரொக்கமாக எடுக்க அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு 4 நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

ஆனால், இதுதொடர்பான அறிவிக்கையை ரிசர்வ் வங்கி உடனே வெளியிடாததால், வங்கிகள் இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஒருவழியாக நேற்று அறிவிக்கை வெளியிட்டது. அதில், திருமண செலவுகளுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.2½ லட்சம் பெற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நிபந்தனைகள்

அந்த அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண செலவுகளை செய்வதற்காக, வங்கி கணக்கில் இருந்து அதிகபட்ச பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 8-ந்தேதி, வங்கி அலுவல் முடிந்த நேரத்தில், ஒருவர் தனது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருந்ததோ, அதிலிருந்து அதிகபட்சமாக ரூ.2½ லட்சம்வரை எடுத்துக்கொள்ளலாம். டிசம்பர் 30-ந்தேதிவரை இந்த அனுமதி செல்லும்.

‘கே.ஒய்.சி.’ (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) விதிமுறைகளை முற்றிலும் பூர்த்தி செய்த கணக்குகளில் இருந்து மட்டுமே பணம் பெற முடியும். டிசம்பர் 30-ந் தேதியோ அல்லது அதற்கு முன்போ நடத்தப்பட உள்ள திருமணத்துக்கு மட்டுமே இந்த அனுமதி செல்லும்.

அழைப்பிதழ் தேவை

திருமணம் செய்து கொள்ளும் நபரோ அல்லது அவருடைய தாய், தந்தையோ வங்கிக்கு சென்று பணத்தை எடுக்கலாம். ஆனால், யாரேனும் ஒருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்துடன், திருமண அழைப்பிதழ் உள்ளிட்ட ஆதாரங்களையும், திருமண மண்டபம் மற்றும் சமையல்காரர்களுக்கு கொடுத்த முன்பணத்துக்கான ரசீது நகல்களையும் இணைக்க வேண்டும். மணமக்களின் பெயர்கள், அவர்களின் அடையாள ஆவணங்கள், முகவரி மற்றும் திருமண தேதியையும் குறிப்பிட வேண்டும்.

வங்கி கணக்கு இருக்கக்கூடாது

ரொக்கமாக செலவழிப்பதற்காகவே பணம் எடுக்கப்படுகிறது என்பதை உறுதி செய்யும்வகையில், யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட உள்ளதோ, அவர்களுக்கெல்லாம் வங்கி கணக்கு இருக்கக்கூடாது.

யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட உள்ளதோ, அவர்களின் பெயர் பட்டியல் தாக்கல் செய்யப்பட வேண்டும். அத்துடன், அவர்கள் தங்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்று அளித்த உறுதிமொழியையும் சமர்ப்பிக்க வேண்டும். என்னென்ன செலவுகளுக்காக பணம் கொடுக்கப்பட உள்ளது என்ற பட்டியலையும் அளிக்க வேண்டும்.

இந்த ஆதாரங்களை எல்லாம் வங்கிகள் சரிவர பராமரிக்க வேண்டும். தேவைப்படும்போது, ஆய்வுக்கு வரும் மேல் அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.

காசோலை

அதே சமயத்தில், ரொக்கம் இல்லாத பரிவர்த்தனைகளான காசோலை, வரைவோலை, கிரெடிட், டெபிட் கார்டுகள், பிரீ பெய்டு கார்டுகள், மொபைல் பரிவர்த்தனை, நெட்பேங்கிங் போன்ற வழிமுறைகளில் திருமண செலவுகளை செய்ய பொதுமக்களை வங்கிகள் ஊக்குவிக்க வேண்டும்.

ஆகவே, எந்தெந்த செலவுக்கு ரொக்கமாக மட்டுமே கொடுக்க முடியுமோ, அதற்கு மட்டும் ரொக்கத்தை பயன்படுத்துமாறு பொதுமக்களை வங்கிகள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...