200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக 2000 ரூபாய் நோட்டுகளை
அச்சிடுவதை மைசூர் பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக அவசர அவசரமாக ரூ.7.4 லட்சம் கோடி மதிப்பிலான 370 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. ரிசர்வ் வங்கியின் புள்ளி விபர கணக்கின்படி, ஜூலை 14 ஆம் தேதி வரை 15.22 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணப் புழக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்காக 100 கோடி 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வருகிறது. இந்தப் பணி கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2000 ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக 500 ரூபாய் நோட்டுகள் அதிகம் அச்சிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
